Selections from the Writings of the Báb
Tamil ·
ஆன்மீக வளர்ச்சி BB00374MEA
என் கடவுளே, உமதன்பு, நல்விருப்பம் ஆகியவற்றின் முழு அளவினை எனக்குத் தந்தருள்வீராக; அதிவிழுமிய ஆதாரமும், சர்வ ஒளிமயமானவரும் ஆனவரே, உமது பிரகாசமிகு ஒளியின் ஈர்ப்புகளின் வாயிலாக, எங்கள் இதயங்களைப் பரவசமடையச் செய்திடுவீராக. கோடையின் பிரபுவே, பகல் வேளையிலும் இரவு காலத்திலும், உமது வலுவூட்டும் இளந்-தென்றல்களை, உமது கிருபையின் ஓர் சின்னமாக என் மீது பொழிந்திடுமாறு செய்திடுவீராக.
என் கடவுளே, உமது திருவதனத்தைக் கண்ணுறத் தகுதி பெறுவதற்கு நான் எந்த நற்செயலையுமே செய்ததில்லை; இவ்வுலகம் நிலைத்திருக்கும் வரை நான் வாழ்ந்திருந்தாலும், இச்சலுகைக்காகத் தகுதி பெறுவதற்கு நான் எச் செயலையும் சாதித்திடத் தவறி விடுவேன் என, நான் நிச்சயமாக அறிவேன். ஏனெனில், உமது கொடை என்னை வந்தடைந்தால் அன்றி, உமது மென்கருணை என்னை ஊடுருவினால் அன்றி, உமது அன்பிறக்கம் என்னைச் சூழ்ந்திட்டால் அன்றி, ஓர் ஊழியனின் ஸ்தானம் உமது புனித சந்நிதானத்தை நெருங்குவதற்கு என்றுமே தகுதியற்றதாகவே இருக்கும். உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்பதற்குரியவரே, புகழ் எல்லாம் உமக்கே உரியதாகுக. உம்மை நெருங்கி உயர்ந்திடவும், உந்தன் அருகிலேயே வசித்திடும் பெருமையை வழங்கப்பெறுவதற்கும், உம்மோடு மட்டுமே உரையாடுவதற்கும், கிருபைகூர்ந்து என்னை இயலச் செய்வீராக. உம்மைத் தவிர கடவுள் வேறிலர்.
மெய்யாகவே, ஓர் ஊழியன் மீது நீர் ஆசி வழங்கிட விரும்பினால், நீர் அவனது இதயம் எனும் இராஜ்யத்திலிருந்து, உம்மைப் பற்றியே சொல்வதையல்லாது மற்றெல்லாச் சொல்லையோ, நினைவையோ அழித்திடுவீர்; மேலும், உமது வதனத்தின் முன், அவனது கரங்கள் அநீதியாக இழைத்திட்ட காரியங்களின் காரணமாக, நீர் ஓர் ஊழியனுக்குத் தீங்கினை விதித்திட்டால், அவன் அதில் தன்னைமறந்து ஈடுபடுவான் என்பதற்காகவும், உம்மைப் பற்றி நினைப்பதையே மறந்து விடுவான் என்பதற்காகவும், இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்டு நீர் அவனைச் சோதித்திடுவீர்.
பற்றின்மை BB00522REF
பிரபுவே! நான் உம்மிடமே அடைக்கலம் கோரி வருகின்றேன், உமது எல்லா அடையாளங்களின் மீதும் நான் என் மனதைப் பதிய வைத்துள்ளேன்.
பிரபுவே! பயணம் செய்யும் பொழுதோ, வீட்டில் இருக்கையிலோ, தொழில் துறையிலோ, வேலை நேரங்களிலோ நான் உம்மிடத்திலேயே எனது முழு நம்பிக்கையையும் வைக்கின்றேன்.
கருணை காட்டுவதில் விஞ்சிட இயலாதவரே! என்னை யாவற்றிலிருந்தும் விடுவிக்கும் பொருட்டு உமது நிறைவளிக்கும் உதவியை என்மீது பொழிந்திடுவீராக.
பிரபுவே! உமது விருப்பத்திற்கேற்ப என் பங்கினை எனக்களித்து, நீர் எனக்காக விதித்துள்ளதன்பால் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வீராக.
ஆணையிடுவதற்கான முழு அதிகாரமும் உம்முடையதே.
பற்றுறுதி BB00554
பிரபுவே, என் அதி மிகு நேசரே, நீர் போற்றப்படுவீராக! உந்தன் சமயத்தில் என்னை உறுதியாக ஆக்கிடுவீராக; நான் உமது ஒப்பந்தத்தை மீறாதவர்களுள் ஒருவனாகவும், அவர்களின் சொந்த வீண் கற்பனைகள் எனும் தெய்வங்களைப் பின்பற்றாதவருள் ஒருவனாகவும் கருதப்பட அருள்வீராக. ஆகையால், உமது முன்னிலையில் உண்மை எனும் ஓர் இருக்கையைப் பெற்றிட இயலச் செய்தும், உமது கருணை எனும் ஒரு சின்னத்தையும் எனக்குத் தந்தருள்வீராக; மேலும் அச்சமற்றோரும், துயருக்கு ஆளாகிடாதோருமாகிய உமது ஊழியர்களோடு என்னை ஒன்றிணையச் செய்வீராக.
என் பிரபுவே, என்னை என்னிடமே கைவிட்டு விடாதீர்; அன்றியும், உமது சொந்தத் தன்மையின் அவதாரமானவரை அறிவதிலிருந்து என்னை இழக்கச் செய்திடாதீர்; அல்லது உமது புனித முன்னிலையிலிருந்து விலகிச் சென்றோருள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டு விடாதீர். என் கடவுளே, உந்தன் அழகின்பால் அவர்களது பார்வையைப் பதித்திடும் சலுகையைப் பெற்றவர்களுள் ஒருவனாகவும்; அதனில் அவர்கள் எத்துணை இன்பத்தைப் பெறுபவர்களாக இருக்கின்றார்கள் என்றால், விண்ணுலகு, மண்ணுலகு ஆகிய இராஜ்யங்களின் அரசாட்சிக்காகவோ, படைப்பெனும் இராஜ்யம் அனைத்திற்காகவோ, ஒரு கணநேரத்தைக்கூட பரிமாற்றம் செய்யாதிருப்போர்களாக இருக்கின்ற அவர்களுள் ஒருவனாக என்னைக் கணக்கிட்டுக் கொள்வீராக. என் பிரபுவே, உமது உலகின் மக்கள் கொடூரமாகத் தவறிழைத்துள்ள இந்நாள்களில் என் மீது கருணைக் காட்டுவீராக; எனவே, என் கடவுளே, உந்தன் மதிப்பீட்டில் நன்மையானதையும், தகுந்ததையும் எனக்கு வழங்கிடுவீராக. மெய்யாகவே, சர்வ சக்திமிக்கவரும், கிருபையாளரும், கொடைவள்ளலும், என்றும் மன்னிப்பவரும் நீரே ஆவீர்.
என் கடவுளே, செவிகள் கேளாமலும், கண்கள் குருடாகவும், நாவுகள் பேசவியலாமலும், இதயங்கள் புரிந்துகொள்ள இயலாமலும் உள்ளவர்களுள் ஒருவனாக நான் கருதப்-படாதிருக்க எனக்கு அருள்வீராக. பிரபுவே, அறியாமை, சுயநல ஆசை ஆகிய தீயிலிருந்து என்னை மீட்பீராக; உமது தலையாயக் கருணையின் சூழிடங்களுக்குள் என்னை நுழைந்திடச் செய்தும், உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நீர் விதித்தருளியவற்றை என் மீதும் பொழிந்திடுவீராக. நீர் விரும்பியதைச் செய்திடச் சக்தி படைத்தவர் நீரே. மெய்யாகவே, ஆபத்தில் உதவுபவரும், சுய ஜீவியானவரும் நீரே ஆவீர்.
மன்னிப்பு BB00593
கடவுளே எங்கள் பிரபுவே! உமக்கு ஒவ்வாததாயிருக்கின்ற எதனிலிருந்தும், உமது கிருபையைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; நீர் நன்கு ஏற்கின்றவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமது அருட்கொடைகளிலிருந்து எங்களுக்கு அதிகமாக வழங்கி, எங்களை ஆசீர்வதிப்பீராக. நாங்கள் செய்துள்ள காரியங்களுக்காக எங்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களைக் கழுவிடுவீராக, உமது கருணைமிகு மன்னிக்கும் தன்மையைக் கொண்டு எங்களை மன்னிப்பீராக.
உமது அன்புமிகு திருவருளானது, விண்ணிலும் மண்ணிலும் உள்ள படைப்புப் பொருள்கள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது; மேலும் உமது மன்னிக்கும் தன்மை, படைப்பு முழுவதையும் விஞ்சியுள்ளது. இறையாண்மை உமக்கே உரியது; படைப்பு, திருவெளிப்பாடு ஆகிய இராஜ்யங்கள், உமது அதிகாரத்திற்கு உட்பட்டவை; உம்மால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களையும் நீர் வலக் கரத்தில் பிடித்துக்கொண்டுள்ளீர்; நிர்ணயிக்கப்பட்ட அளவுகளின் படி மன்னிப்பானது உமது பிடிக்குள் அடங்கியுள்ளது. நீர் விரும்பியவாறு உமது ஊழியர்களுள் எவர் ஒருவரையும் நீர் மன்னித்தருள்வீர். மெய்யாகவே, என்றும் மன்னிப்பவரும், சர்வ அன்பானவரும் நீரே ஆவீர். உமது அறிவிலிருந்து எதுவும் தப்பிவிடுவதில்லை; மேலும் உம்மிடமிருந்து மறைந்துள்ளவை எதுவுமே இல்லை.
கடவுளே எங்கள் பிரபுவே! உமது வல்லமையின் சக்தியைக் கொண்டு எங்களைப் பாதுகாப்பீராக; அற்புதமாகப், பொங்கி எழும் உமது சமுத்திரத்திற்குள், எங்களை நுழைந்திடும்படி செய்து, உமக்குப் பொருத்தமானவற்றை எங்களுக்குத் தந்தருள்வீராக.
இறைமைமிக்க ஆட்சியாளரும், வலியதைச் செய்பவரும், மென்மையானவரும், அதி அன்பானவரும் நீரே ஆவீர்.
மன்னிப்பு BB00617
பிரபுவே, உமது முன்னிலையில் அத்துமீறிய என் செயல்கள் என் முகத்தை வெட்கத்தால் மூடி மறைத்துள்ளன என்பதையும், உம் முன்னே எனக்குச் சுமையாகவும் ஆகியுள்ளன என்பதையும், எனக்கும் உமது அழகிய வதனத்திற்கும் இடையே குறுக்கிட்டுள்ளன என்பதையும், எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைச் சூழ்ந்துள்ளன என்பதையும், உமது விண்ணுலகச் சக்தியின் வெளிப்பாடுகளை அடைவதிலிருந்து எல்லாத் திசைகளிலிருந்தும் என்னைத் தடுத்துள்ளன என்பதையும் நான் உணர்கின்றேன்.
பிரபுவே! நீர் என்னை மன்னிக்காவிடில், மன்னிப்பு வழங்குவதற்கு வேறு எவருளர்; என் மீது நீர் கருணை காட்டாவிடில், இரக்கப்படுவதற்கு வேறு யாரால் இயலும்? புகழ் உமக்கே உரியதாகுக; இல்லா நிலையில் நான் இருந்தபோதும் நீர் என்னைப் படைத்துள்ளீர்; எனக்கு எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நிலையிலும் நீர் என்னைப் பேணியுள்ளீர். அருட்கொடைக்கான ஒவ்வோர் ஆதாரமும் உம்மிடமிருந்தே தோன்றுகின்றது என்பதற்காகவும்; கிருபை எனும் ஒவ்வொரு சின்னமும் உமது கட்டளை எனும் கருவூலங்களிலிருந்து வெளிப்படுகின்றது என்பதற்காகவும், உமக்கே புகழெல்லாம் சேரட்டுமாக.